Tamilசினிமா

திரைத்துறை தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய நடிகர் யாஷ்

கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் யாஷ் உதவிக்கரம் நீட்டி உள்ளார். இதற்காக அவர் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார். இந்தத் தொகை சுமார் 3 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் பிரித்து வழங்கப்பட உள்ளதாம். நடிகர் யாஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.