Tamilசெய்திகள்

திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் – போலீசில் புகார் அளிக்க தேவஸ்தானம் முடிவு

காஞ்சிபுரத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் பல நாட்கள் சிறையில் இருந்தார். பலமுறை ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியான நிலையில் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை ஓட்டக் கூடாது, மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்த டிடிஎஃப் வாசன், சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். சாமி கும்பிடுவதற்காகக் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனிடையே, இது குறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பதி மலையில் பக்தர்கள் மன வருத்தம் அடையும் வகையில் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.