Tamilசெய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை – தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் நேற்று முன்தினம் சுவரில் துளை போட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக நகைகளை பைகளில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

நகைக்கடை அருகில் உள்ள செல்போன் டவர்களில் பதிவாகியிருந்த செல்போன் எண்களை சேகரித்து விசாரணை நடத்தினர். முதலில் இது வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை என்று கூறப்பட்டது.

ஆனால் கொள்ளை நடந்த இடத்தில் மிளகாய் பொடி தூவி சென்றது போன்ற செயல்கள் மூலம் இது உள்ளூர் ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிப்படை போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். நேற்று இரவு 8 மணியளவில் திருவாரூர் அருகே உள்ள விளமல் அடியக்கமங்கலம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினர்.

போலீசாரை பார்த்ததும் இருவரும் தாங்கள் கொண்டு வந்த மூட்டையை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இருப்பினும் போலீசார் அவர்களை 1 கி.மீ. தூரம் வரை விரட்டி சென்றனர். இதில் ஒருவன் மட்டும் சிக்கினான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.

பிடிபட்ட வாலிபரிடம் அட்டைப்பெட்டி ஒன்று இருந்தது. அதனை போலீசார் திறந்து பார்த்தனர். அப்போது அதில் புதிய தங்க நகைகள் இருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளாக இருக்கலாம் என்று கருதி வாலிபரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

நகைகளை ஆய்வு செய்த போது அதில் லலிதா ஜூவல்லரி முத்திரை இருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் 4½ கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மணிகண்டன் (வயது 32) என்பது தெரியவந்தது. லலிதா ஜூவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட இவர் திருவாரூர் அருகே உள்ள மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்.

நேற்று முன்தினம் கொள்ளையடித்த பிறகு தலைமறைவாக இருந்த மணிகண்டன் தனது பங்கு நகையை பிரித்து கொண்டு வீட்டுக்கு சென்றபோதுதான் வாகன சோதனையில் சிக்கியது தெரியவந்தது.

தப்பி ஓடிய கொள்ளையனின் பெயர் சுரேஷ் திருவாரூர் பேபி டாக்கீஸ்ரோட்டை சேர்ந்தவன். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையின்போது மணிகண்டன் பல்வேறு தகவல்களை தெரிவித்தான். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் தன்னிடம் உள்ளது போக மீதி நகைகள் தப்பியோடிய கூட்டாளி சுரேஷிடம் உள்ளதாக கூறினான்.

லலிதா ஜூவல்லரி கொள்ளையில் பிரபல வங்கி கொள்ளையனான திருவாரூர் முருகனுக்கு உள்ள தொடர்பு பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

இந்த கொள்ளைக்கு திருவாரூர் முருகனே திட்டம் போட்டு கொடுத்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவனை பிடிப்பதற்கும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகன் வடமாநிலங்களில் நடந்த பல்வேறு வங்கி, ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவன். லலிதா ஜூவல்லரியில் எந்த இடத்தில் துளையிடுவது? எப்படி கொள்ளையடிப்பது, எப்படி தப்பி செல்வது? என்றும் முருகனே திட்டம் வகுத்து கொடுத்துள்ளான்.

வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடிப்பது போல திட்டத்தை நிறைவேற்றி போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிடலாம் என்றும் முருகன் யோசனை தெரிவித்து உள்ளான்.

அதன்படி வடமாநில கொள்ளையர்கள் அணியும் ஜீன்ஸ், ஜெர்கின், முகமூடி அணிந்து மணிகண்டனும், சுரேசும் கொள்ளையடித்துள்ளனர்.

இதற்கிடையே சுரேசின் தாய் கனகவள்ளி மற்றும் நண்பர்கள் குணா, ரவி, மாரியப்பன் உள்ளிட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுரேஷ் எங்கே என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீதி நகையுடன் தலைமறைவான சுரேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக அவரது உறவினரிடம் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கைதான கொள்ளையன் மணிகண்டனை லலிதா ஜூவல்லரி நகைக்கடைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். நகை கொள்ளையில் 2 நாளில் குற்றவாளிகள் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *