Tamilசினிமா

தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது – நடிகர் அருண் பாண்டியன் வருத்தம்

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ்,
அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ்
என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசைவெளீயிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், அமீர், இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன்,
நடிகர் அருண்பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அதில் நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசியது, ”18 வருடங்களுக்கு பிறகுதான் ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நான் மீண்டும் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு
என்னைத்தேடி எட்டு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. அதில் எனக்கு இரண்டே இரண்டு படத்தின் கதைதான் பிடித்தது. அதில் ஒன்று ஆதார். அதன்பிறகு இயக்குனரிடம் இந்த படத்தில்
வேறு யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன் கருணாஸ் என்றார். கருணாசுக்கு போன் செய்து ராம்நாத் கதையை சொன்னார். நன்றாக இருந்தது. அவர் சொன்னதை சொன்னவிதத்தில் எடுத்து
விடுவாரா? என கேட்டேன். அவர்தான் முழு நம்பிக்கையுடன் எடுத்துவிடுவார் என்றார். கதையைச் சொன்ன மாதிரி எடுத்து விட்டால், நான் என் சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை சலுகையாக
தருகிறேன் என்றேன். படம் மிக நேர்த்தியாக உருவாகியிருக்கிறது.‌

இங்கு மேடையில் இயக்குனர் சரவணன் பேசும்போது,‘ தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குனர்
பாரதிராஜா படம் இயக்கிய காலம், நாங்கள் நடித்த காலம் என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது. தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என
குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள் தான் அதிக வசூலை குவிக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டும் படத்திற்காக
செலவழிக்கவில்லை, தங்களுக்காக செலவழித்து கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி? படத்தை உருவாக்க இயலும். இந்த மேடையை ஒரு வாய்ப்பாக
பயன்படுத்திக்கொண்டு, ‘இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்’. நாங்கள் படம் எடுக்கும் பொழுது 10% தான் சம்பளம், மீதி 90% படத்தயாரிப்பிற்காக இருக்கும். அந்தக் காலகட்டத்தில்
தமிழ் சினிமா கதைகள் பட உருவாக்கத்தால் வென்றது
.
‘ஆதார் ’படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இங்குதான் சந்திக்கிறோம். சினிமா ஒரு மோசமான திரை உலகம். இருப்பினும்
இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து, புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என்றால், அவரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்திற்கு நாங்கள் உண்மையாக உழைத்திருக்கிறோம்.
அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.