Tamilசெய்திகள்

தமிழ்நாட்டுக்கு சென்று இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – காங்கிரஸ் தலைவர் கேள்வி

கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகின்றன.

முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது முடா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார். அதற்கு கார்கே கன்னடத்தில் பதில் தெரிவித்தார். அதற்கு இந்தியில் பதில் தெறிக்குமாறு அந்த செய்தியாளர் தெரிவித்தார். இதனை கேட்டதும் கடுப்பான கார்கே, கேள்வியை கன்னடத்தில் கேட்குமாறு காட்டமாக தெரிவித்தார்.

“கர்நாடகாவுக்கு வரும் போது சிறிதாவது கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் தமிழ்நாட்டிற்குச் சென்று இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? கர்நாடகாவுக்கு வரும் போது கொஞ்சமாவது கன்னட மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டு கார்கே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

மல்லிகார்ஜுன கார்கே பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.