Tamilசெய்திகள்

தமிழக மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து (வயது 44), பன்னீர்செல்வம் (48), ராஜேந்திரன் (54) ஆகிய 3 மீனவர்கள் இன்று அதிகாலை வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறினர்.

அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் படகை விட்டு இறங்குங்கள் என கூறினர். திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகியோரை கம்பு, இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கி அவர்களை கடலுக்குள் தூக்கி வீசினர்.

பின்னர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, வாக்கிடாக்கி செல்போன், டீசல் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இதற்கிடையே காயத்துடன் கடலில் தத்தளித்த நாகமுத்து உள்ளிட்ட 3 பேரும் போராடி நீந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்த சக மீனவர்கள் உடனடியாக தாங்கள் வந்த படகில் 3 பேரையும் ஏற்றி கொண்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்தனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கடல்பகுதிக்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.