Tamilசெய்திகள்

தமிழக மீனவர்களின் 3 படகுகைகளை இலங்கை அரசுடமையாக்கி நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அப்போது மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 3 விசைப்படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்த படகுகள் யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த வழக்கு ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு படகுகளின் உரிமையாளர்கள் ஆஜராகாததால் தமிழகத்தின் 3 விசைப் படகுகளையும் அரசுடைமையாக்க நீதிபதி கஜநீதிபாலன் உத்தரவிட்டார். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்களின் 3 விசைப் படகுகளையும் இலங்கை அரசுடைமையாக்கி உள்ளது. இந்த 3 விசைப்படகுகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும் என்று தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 4 படகுகள் தொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ஆஜரான படகுகளின் உரிமையாளர்கள், தங்களது படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கில் வருகிற மார்ச் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.