Tamilசெய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 14-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை மறுதினமும் (புதன்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (14-ந்தேதி) கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலவில் 10 செ.மீட்டரும், அவலாஞ்சி, சின்னக்கல்லாறு, சின்கோனா, வால்பாறை பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. மேல்பவானி, நடுவட்டம், கூடலூர் பஜார், சோலையாறு தலா 5 செ.மீட்டரும், மேல்கூடலூர், பாரவூட், எமரால்ட் பகுதிகளில் 3 செ.மீட்டர் அளவிலும் மழை பதிவாகி உள்ளது.