Tamilசெய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பரவாயில்லை – மதுரை உயர் நீதிமன்றம்

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது உருமாறிய கொரோனா தொற்று இந்தியா முழுவதும் பரவி வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் உத்தரவின் பேரில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயன் பெற முடியாத நிலை உள்ளது. அரசு தரப்பில் இலவசமாக போடப்படும் கொரோனா தடுப்பூசி பெரும்பாலான பொதுமக்களுக்கு தற்போது வரை போடப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை போட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பரவாயில்லை. அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றனர்.

பின்னர் இந்த வழக்கை ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.