Tamilசெய்திகள்

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு – மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று 1385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

நோய் தடுப்பு பணி, தடுப்பூசி போடும் பணியை மேலும் வேகப்படுத்துவது குறித்தும், கொரோனாவை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை உள்ளதா என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.