Tamilசெய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஊரடங்கு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.