தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் 7 மற்றும் 8-ந்தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதே போல் திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லாரில் (கோவை) தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இன்றும், நாளையும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று முதல் 10-ந்தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools