Tamilசெய்திகள்

தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி – 4 பேர் மாயம்

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். பின்னர் மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர்.

இந்த நிலையில் இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர். இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேர் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் பிரவீன்ராஜ், தாவீது, ஈசாக், தெர்மஸ் ஆகிய 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.