Tamilவிளையாட்டு

டோக்கியோவில் இன்று பாராலிம்பிக் இன்று தொடங்குகிறது

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் பாராலிம்பிக்கில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல் பாதிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்ளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் கைப்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது.

கடந்த 2016ல் ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார்.

இவர்கள் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உலக சாதனையாளர்கள் சந்தீப் சவுத்ரி, சுமித் ஆகியோரும் தடகள அணியில் உள்ளனர்.

வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலு தூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி போல பாராலிம்பிக்கிலும் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என 11 பேர் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தவிர வினோத்குமார் (வட்டு எறிதல்) தேக்சந்த் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப், சகினா (வலு தூக்குதல்) ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.