Tamilவிளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான திறமையை சோதிக்கும் – ரவிசாஸ்திரி கருத்து

கடந்த 2019-ல் இருந்து 2021 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் வருகிற 18-ந்தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இதற்கான இந்திய அணி நேற்றிரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. புறப்படுவதற்கு முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை 3 ஆட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும். ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல. வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினால், இறுதிப்போட்டியை 3 ஆட்டங்கள் கொண்டதாக நடத்துவதே சிறந்தது.

தற்போது முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இது மிகப்பெரிய போட்டியாக இருக்கப்போகிறது. டெஸ்ட் கிரிக்கெட்தான் உங்களது உண்மையான திறமையை சோதிக்கும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றும் மூன்று அல்லது மூன்றரை மாதங்களில் நடந்து முடிந்துவிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிசுற்றை எட்டியுள்ளன.

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.