Tamilசெய்திகள்

டென்மார்க் ராணியை சந்தித்த பிரதமர் மோடி

ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு டென் மார்க் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து  கோபன்ஹேகன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு டென்மார்க் வாழ் இந்தியர்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி இசை கருவிகளை வாசித்து வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ரசித்த பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்த டிரம்ஸ் இசையை வாசித்து மகிழ்ந்தார்.

இதையடுத்து டென்மார்க் ராணி இரண்டாம் மார்க்கிரேத்தை,  அவரது அரண்மனையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

முன்னதாக அவருக்கு டென்மார்க் மன்னராட்சி முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.  மார்க்கிரேத் டென்மார்க் ராணியாக பதவியேற்று பொன் விழாவை ஆண்டையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

82 வயதான  மார்க்கிரேத் 1972 முதல் டென்மார்க் மன்னராட்சியின் ராணியாக இருந்து வருகிறார். டேனிஷ் முடியாட்சி உலகின் மிகப் பழமையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.