Tamilவிளையாட்டு

டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர் காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த ஆண்டு பல தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து குணமடைந்து கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் அரை இறுதி போட்டி வரை முன்னேறிய அவர், ஆன்டி முர்ரேவிடம் தோல்வியடைந்தார். இதை தொடர்ந்து அவர் ஸ்பெயின் திரும்பிய நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரபேல் நடால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது:-

இன்று ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அபுதாபியில் நான் தோல்வி அடைந்தாலும் நீண்ட நாட்களுக்கு பின் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்வில் ஏற்பட்ட பல சறுக்கல்களில் இருந்து இப்போது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறேன். அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது.

இவ்வாறு ரபேல் நடால் கூறினார்.