Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாரான துவக்கத்தையே கொடுத்தனர்.

இந்த ஜோடி முறையே 13 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது. அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய அக்சர் படேல் 20 ரன்களை சேர்த்தார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரௌஃப் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் ஷா அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.

120 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 31 ரன்களையும், கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த உஸ்மான் கான் மற்றும் ஃபகர் சமான் 13 ரன்களை சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாசார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.