டி.என்.பி.எல் கிரிக்கெட் – நெல்லை வீழ்த்தி திருச்சி அணி வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய திருச்சி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அமித் சாத்விக் 71 ரன்கள் விளாசினார்.

ஆதித்ய கணேஷ் 33 ரன்கள், அந்தோணி தாஸ் 35 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர். இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய நெல்லை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெல்லை அணி, மீதமுள்ள விக்கெட் காப்பாற்ற கடுமையாக போராடியது. 6வது விக்கெட் ஜோடியான பாபா இந்திரஜித்-சஞ்சய் யாதவ் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடினர். இதனால் ஓரளவு நம்பிக்கை பிறந்தது.

ஆனால், சஞ்சய் யாதவ் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பாபா இந்திரஜித் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, நெல்லை அணி 13.4 ஓவர்களில் 77 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools