Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – நாளை முதல் பிளே ஆப் போட்டிகள் ஆரம்பம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது.

கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.

ரூபி திருச்சி வாரியரஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 புள்ளியுடன் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 8 புள்ளியுடன் 3-வது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் 7 புள்ளியுடன் 4வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் நாளை (10ம் தேதி) தொடங்குகிறது. சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த ரூபி திருச்சி வாரியர்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மோதும்.

வெளியேற்றுதல் சுற்று நாளை மறுதினம் (11ம் தேதி) நடைபெறுகிறது.  இதில் 3-ம் இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், 4-ம் இடம் பிடித்த லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1 சுற்றில் தோற்ற அணியுடன் மோதும். இது குவாலிபையர் 2 சுற்று ஆகும்.

13-ம் தேதி நடைபெற உள்ள குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி ஆகஸ்டு 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் குவாலிபையர் 1ல் வென்ற அணியும், குவாலிபையர் 2ல் வென்ற அணியும் மோத உள்ளன.