Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 சேர்த்தது.

அதிகபட்சமாக மோகித் ஹரிஹரன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் விக்னேஷ் அய்யர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், அருண் கார்த்திக்-பால்சந்தர் அனிருத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

அருண் கார்த்திக் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பால்சந்தர் அனிருத் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் சேர்க்க, மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.