Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – இறுதிப் போட்டிக்கு நுழைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் சேலத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார். ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 40 ரன் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் டக் அவுட்டானார்கள். சாய் கிஷோர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். சசியாதவ் 4 ரன்னுடன் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த ராஜகோபால் சதீஷ், ஹரிஷ்குமார் ஜோடி அணியின் வெற்றிக்கு போராடியது.

அதிரடி காட்டிய சதீஷ் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹரீஷ்குமார் 13 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இதனையடுத்து சேப்பாக் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி.என்.பி.எல்.இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.