Tamilசெய்திகள்

டி.ஆர்.எஸ் கட்சியுடன் எந்தக் கூட்டணியும் இல்லை – ராகுல் காந்தி உறுதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உட்பட தெலுங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 30 பேர் இந்த
கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது தெலுங்கானாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் டி.ஆர்.எஸ் கட்சியுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என்று ராகுல் காந்தி
தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் மூத்த தலைவர் ரேவந்த் ரெட்டி, விவசாயிகள், பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நெல் கொள்முதல்
உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ராகுலுடன் தாங்கள் விவாதித்ததாக கூறினார்.

இந்த மாதம் தெலுங்கானாவுக்கு ராகுல்காந்தி வர உள்ளதாகவும்,
அந்த மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போராடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2024 ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநில முதலமைச்சருமான
கே.சந்திரசேகர ராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் அறிவிப்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.