Tamilவிளையாட்டு

டிவில்லியர்ஸ் மீண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் – ரவிசாஸ்திரி அழைப்பு

உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் 2018-ல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

36 வயதான டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன் எடுத்தார். பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர் ஒருவரால் மட்டுமே அதிரடியாக ஆட முடிந்தது. அவரது ஆட்டத்தை கேப்டன் வீராட் கோலி பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிராக டிவில்லியர்சின் ஆட்டம் அற்புதமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இதை பார்க்கும்போது கனவா? நினைவா? என்று எண்ண தோன்றியது.

இதனால் நீங்கள் (டிவில்லியர்ஸ்) ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விளையாட வாருங்கள்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.