Tamilசெய்திகள்

டிசம்பர் 2 ஆம் தேதி கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியதை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் டிசம்பர் 2-ந்தேதி சிவானந்தா காலணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். போராட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

இதில் கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி,ஏ.கே.செல்வராஜ், அவைத் தலைவர் சிங்கை முத்து, பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.