Tamilவிளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட் தகுதி சுற்று – திண்டுக்கல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்

நான்காவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றுகள் நெல்லையில் இன்று தொடங்குகிறது. இதில் இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கி நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த திண்டுக்கல் டிராகன்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் மோதுகின்றன.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த சீசனில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றது. கோபிநாத்தின் நேர்த்தியான பேட்டிங்கும் (3 அரைசதம் உள்பட 277 ரன்), பெரியசாமி (13 விக்கெட்), ஹரிஷ்குமார் (14 விக்கெட்), அலெக்சாண்டர் (11 விக்கெட்), முருகன்அஸ்வின் (7 விக்கெட்) ஆகியோரின் அபார பந்து வீச்சும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரின் வருகை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. தொடக்க லீக்கில் 10 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதற்கு பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்தது. ஆர்.அஸ்வினின் கேப்டன்ஷிப்பும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 361 ரன்), ஹரி நிஷாந்த் (238 ரன்) உள்ளிட்டோரின் பேட்டிங்கும் திண்டுக்கல் அணிக்கு பக்கபலமாக இருக்கிறது. லீக் சுற்றை போல் பிளே-ஆப் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர். மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

மெதுவான தன்மை கொண்ட நெல்லை ஆடுகளத்தில் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த மைதானத்தில் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறது. அந்த ராசி இந்த ஆட்டத்திலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோத வேண்டும்.

இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) ஷிஜித் சந்திரன் தலைமையிலான நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்றில் ஆடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இரு போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *