டிஎன்பிஎல் கிரிக்கெட் – காஞ்சியை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி

டிஎன்பிஎல் பிரீமியர் தொடரின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காஞ்சி வீரன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து, அந்த அணியின் விஷால், அருண் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அருண் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய காஞ்சி அணியின் கேப்டன் பாபா அப்ரஜித் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சற்றுநிலைத்து நின்று ஆடிய தொடக்கவீரர் விஷால் 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல் அணி தரப்பில் அந்த அணியின் மோகன் அபினவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஜெகதீசன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சுமந்த் 8 ரன்னிலும், கேப்டன் அஸ்வின் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 134 ரன்களை எட்டியது. ஹரி நிஷாந்த் 61 ரன்களுடனும், விவேக் 26 ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

காஞ்சி வீரன்ஸ் தரப்பில் அந்த அணியின் திவாகர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news