Tamilசெய்திகள்

டாக்டர்.சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும், உலக புகழ்பெற்ற புற்று நோய் நிபுணருமான மருத்துவர் சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

மருத்துவர் சாந்தா அவர்கள், 1955 ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். இவர் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவினை பெற்று 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை மேம்படுத்தி, நவீன வசதிகளை கொண்டு வந்து, புற்று நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க மருத்துவர் சாந்தா அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என அடிக்கடி பரிசோதனைகள் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவரது மருத்துவ சேவைப் பணிகள் உலக அளவில் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டது.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2013 ம் ஆண்டு, மருத்துவர் சாந்தா அவர்களுக்கு ஔவையார் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.

மருத்துவர் சாந்தா அவர்களின் மகத்தான மருத்துவ சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருகளை வழங்கி கௌவுரவித்துள்ளது. இது தவிர, இவருக்கு உலக புகழ்பெற்ற மகசேசே விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்து வரும் வறிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அடையாறு புற்று நோய் சிசிச்சை மையத்தின் மனித நேய கொள்கை பாராட்டிற்குரியது. அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் உன்னதமான சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இம்மையத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி, இதனை மாநில அளவில் புற்று நோய் சிகிச்சைக்கான, தலைமை மையமாகவும்
அங்கீகரித்துள்ளது.

மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது சிகிச்சை முறைகள் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நிலைத்து, அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

மருத்துவர் சாந்தா அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்தஇரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மருத்துவர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.