Tamilசினிமா

ஜெய் பீம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார். அதன்பின் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

முன்னதாக பிரிவினையை ஏற்படுத்தி, ஜாதி, மத கலவரங்களை துாண்டும் வகையில், ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதனால், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ருத்ர வன்னியர் சேனா தலைவர் சந்தோஷ், சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் விபரத்தை, வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேளச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் தாக்கல் செய்த மனுவை ஜூலை 21-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.