Tamilசெய்திகள்

ஜெயலலிதா பற்றி வெளிவராத ரகசியங்கள்!

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-12-2016 அன்று மரணம் அடைந்தார்.

அவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவரை பற்றிய சர்ச்சைகள் இன்றும் தொடர்கின்றன. ஜெயலலிதா பற்றி வெளிவந்ததைவிட, வெளிவராத உண்மைகளே அதிகம். ஜெயலலிதாவின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் சில முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், அவரது வாழ்வின் முக்கியமான பக்கங்கள் இன்றும் வெளிவராத மர்மங்களாக தொடர்கின்றன.

ஜெயலலிதாவின் சொந்த ஊர் எது? என்பது முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அவரது வாழ்வின் வெளிவராத உண்மைகளை ‘தந்தி’ டி.வி. பிரத்யேக ஆவணங்களோடு ஆவணப்படுத்தி உள்ளது.

‘தந்தி’ டி.வி.யில் இன்று (திங்கட்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் ஜெயலலிதா பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்கள் இடம் பெறுகின்றன.

இதுவரை பொதுவெளியில் தலைகாட்டாத ஜெயலலிதாவுடன் வாழ்ந்த சொந்தபந்தங்கள் முதன்முறையாக அவரை பற்றிய பல வெளிவராத உண்மைகளை பகிர்ந்து உள்ளனர்.

ஜெயலலிதாவுடன் அவரது வீட்டில் வளர்ந்து, வாழ்ந்த அனுபவங்களை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஜெயலலிதாவின் தங்கை அமீதா சாரி. இவர் ஜெயலலிதாவும், அவரது அம்மாவும் திரைத்துறைக்குவர காரணமாக இருந்த அவரது சித்தி வித்யாவதியின் மகள்.

ஜெயலலிதாவை தந்தை நிலையிலிருந்து பெங்களூருவில் வளர்த்த அவரது தாய்மாமா சீனிவாசனின் மகள் அனுராதா ரமேஷ், ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத குமுறலை இந்த தொடரின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். “அனாதை போல் இறந்தாரே அக்கா” என அவர் வேதனை தெரிவித்து இருக்கிறார்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவருடன் இறுதிவரை வாழ்ந்த அவரது 40 ஆண்டுகால பணியாளர் ராஜம், ஜெயலலிதா பற்றிய உலகறியாத ஏராளமான புதிய தகவல்களை முதன்முறையாக கூறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-9-2016 அன்றிரவு அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சில் நடந்தது என்ன? என்பது பற்றியும், ஜெயலலிதா பற்றிய ஆச்சரியமான பல தகவல்களையும் பகிர்ந்து உள்ளார் ஜெயலலிதாவின் தனி மருத்துவரான டாக்டர் சிவக்குமார்.

ஜெயலலிதாவின் அத்தை மகன் ரங்காச்சார், சசிகலாவின் அண்ணன் மகள்கள் அனுராதா தினகரன், பிரபா சிவக்குமார் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அரிய தகவல்களை வெளிக்கொண்டு வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் உடல்நிலை மோசம் அடைய தொடங்கியது எப்போது? ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது நடந்த அதிர்ச்சி சம்பவங்கள், ஜெயலலிதாவின் நிறைவேறாத கடைசி கனவு, ஜெயலலிதாவின் உண்மையான சொந்த ஊர் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது “ஜெ.ஜெயலலிதா எனும் நான்” என்ற இந்த தொடர்.

இந்த தொடரின் முத்தாய்ப்பாக ஜெயலலிதாவின் எதிர்கால விருப்பம் தொடர்பான சில பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. முன்னர் ஒரு பேட்டியின்போது தனது ஓய்வுகால ஆசை தொடர்பாக மனம் திறந்த ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது திராட்சை தோட்டத்துக்குச் சென்று அரசியல், ஆர்ப்பாட்டம், பத்திரிகையாளர்கள் கேள்விகள் இவை எல்லாவற்றையும் தவிர்த்து நிம்மதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், காலப்போக்கில் அவர்மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட பிறகு, பல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இறுதியாக நடந்துவந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் பரிபூரணமாக அரசியலுக்கே முழுக்குப்போட வேண்டும் என்பது அவரது விருப்பமாகவும், இறுதி முடிவாகவும் இருந்துள்ளது.

இதுதொடர்பான அதிக தகவல்களை இன்றுமுதல் வரும் வெள்ளிக்கிழமை வரை ‘தந்தி’ டி.வி.யில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ தொடரில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *