ஜூலை 3 வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது?

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓரிரு நாட்களில் தேதியை இறுதி செய்யும். ஜூலை 17 அல்லது 20-ந்தேதி ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் தொடங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் வேலை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் பழைய கட்டிடத்தில் மழைக்கால கூட்டம் நடத்தப்படலாம் என்பதை புறந்தள்ளிவிட முடியாது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, டெல்லி மாநில அரசு தொடர்பான அவசர சட்டம் ஆகிய விவகாரத்தை கையில் எடுக்கும் எனத் தெரிகிறது.

குறிப்பாக டெல்லி மாநில அரசுக்கு எதிரான அவசர சட்டம் அதிர்வலையை ஏற்படுத்தும். மக்களவையில் பா.ஜனதாவுக்கு போதுமான ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில்தான் பா.ஜனதாவுக்கு போதுமான எம்.பி.க்கள் எண்ணிக்கை இல்லை. ஆகவே, கெஜ்ரிவால் பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news