Tamilசெய்திகள்

ஜார்க்கண்ட் மாநில ரோப் கார் விபத்து – தேசிய பேரிடர் மீட்பு படைக்கு பிரதமர் பாராட்டு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாபா வைத்யநாத் கோவில். இது சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று.

திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் ரோப் கார்கள் மூலம் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட 48-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று
கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் நடந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

இந்நிலையில், மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்ட வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் மக்களை மீட்டெடுப்பதில் உங்களின் வலிமையை நினைத்து இந்த தேசம் பெருமிதம் கொள்கிறது. திரிகூட் விபத்திலிருந்து
பாடங்களைக் கற்றுக் கொள்வோம். உங்கள் அனுபவம் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களைப் பாராட்டும் அதே நேரம், சில உயிர்கள் பலியானது வருத்தம் அளிக்கிறது என
தெரிவித்தார்.