Tamilசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பா.ஜ.க. களமிறங்கி உள்ளது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை ஜனாதிபதியாக்க நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கு முழுமையாக தயாராகவில்லை. அமலாக்கத் துறை விசாரணை, உட்கட்சிப் பூசல் போன்றவற்றால் அக்கட்சி இதில் முழு கவனம் செலுத்தவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அவரும் தனது கடிதத்தில் ஜூன் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தங்கள் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.