Tamilசெய்திகள்

சொத்து வரி வசூலில் புதிய சாதனை படைத்த பெங்களூர் மாநகராட்சி

பெங்களூரு மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்து வரி வசூல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரி வசூல் தொடங்கியது. இது தொடங்கிய முதல் 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது. 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது இதுவே முதல் முறை ஆகும். இது வரி வசூலில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

முதல் மாதத்தில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி மேலும் ஒரு மாதம் அதாவது கடந்த மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தள்ளுபடி வழங்கப்பட்ட 2 மாதங்களில் ரூ.2,000 கோடி சொத்து வரி வசூலாகியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தீபக் கூறுகையில், ”நாங்கள் சொத்துவரி செலுத்தும் நடைமுறையில் சில மாற்றங்களை செய்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாக சொத்துவரி வசூல் அதிகரித்துள்ளது. வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் வரும் நாட்களில் சொத்துவரி செலுத்தும் நடைமுறையை மேலும் சீரமைப்போம். கட்டிடங்களின் உரிமையாளர்கள் சரியான முறையில் வரியை செலுத்துகிறார்களா? என்பது குறித்து கட்டிட சர்வே நடத்துகிறோம்” என்றார்.