Tamilவிளையாட்டு

சையது முஸ்தாக் அலி கோப்பை – கர்நாடகாவை வீழ்த்தி தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் நேற்று மோதின. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த்-ஜெகதீஷன் களமிறங்கினர். முதல் ஓவரில் 9 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக ஆடி வந்த நிஷாந்த் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும்.

அடுத்து வந்த சுதர்சன் 9, சஞ்சய் யாதவ் 5, முகமது 5, என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 15-வது ஓவரில் விஜய் சங்கர் 18, ஜெகதீஷன் 41 அடுத்தடுத்து வெளியேறினர்.

அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் தமிழக அணிக்கு வெற்றியை தேடி தந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 1 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.

சையது முஸ்தாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி 3-வது முறையாக கைப்பற்றியுள்ளது.