Tamilசெய்திகள்

செல்போனில் தனக்கு தேவையான ஆப்பை தரவிறக்கம் செய்யாததால் சிறுமி தற்கொலை

தற்போதைய இளைஞர்கள் எந்நேரமும் செல்போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒவ்வொருத்தரின் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இன்றைய இளம் பருவத்தினர், சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதை விட போன் மெசெஜ் மூலம் மற்றவர்களிடம் பேசுவதை விரும்புகிறார்கள். இதனாலேயே மொபைல் செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்னாப்சாட் போன்றவை அதிகம் பிரபலமாக உள்ளன.

ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கிடைக்கின்றன.
இதுபோன்று கிடைக்கும் செயலிகளை பெரும்பாலானோர் உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில், மெசெஜிங் செயலியால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷட்ராவில் உள்ள தானே மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, அவருடைய தந்தை மொபைலில் ஸ்னாப்சாட் செயலியை தரவிறக்கம் செய்ய அனுமதிக்காததால் கோபம் அடைந்தார். இதையடுத்து சம்பவ நாளன்று குடும்பத்தில் அனைவரும் உறங்கியப்பின் அவளது பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழில்நுட்ப வளர்ச்சி பல எல்லைகளை கடந்து வரும் சூழலில், அதன் மீது கொண்ட காதலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் துயரம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே இந்த 9152987821 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.