Tamilசெய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.38 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பாங்காங்கிலிருந்து ஏர் ஏஷியா விமானம் மூலம் சென்னை வந்த சென்னை அசோக் நகரைச்சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் திருச்சியைச் சேர்ந்த ரஷீத், ஆகியோரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், கோலாலம்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த அருண்பாண்டியன், துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த புதுக்கோட்டை கல்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி ஆகிய பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது இவர்கள் பல்வேறு வழிகளில் கடத்தி வந்த மொத்தம் 3.08 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு ரூ.1.38 கோடியாகும். இது தொடர்பாக அருண்பாண்டியன் மற்றும் பழனிசாமி ஆகிய இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.