Tamilசெய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

ஒமைக்ரான் பரவல் காரணமாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி பரிசோதனை முடிவு வரும் வரை, பயணிகள் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு வருவதற்கு 6 மணி நேரம் ஆகும் என்பதால், 45 நிமிடங்களுக்குள் முடிவு வரக்கூடிய ராபிட் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, 3 ஆயிரத்து 400 கட்டணத்தில் ராபிட் பரிசோதனையும், 700 ரூபாய் கட்டணத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ராபிட் பரிசோதனை கட்டணம் 2 ஆயிரத்து 900 ரூபாய் ஆகவும், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டணம் 600 ரூபாய் ஆகவும் குறைத்து விமான நிலைய ஆணையகம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.