சென்னை கிரிக்கெட் அணியின் உரிமையை கைப்பற்றிய நடிகர் சூர்யா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ‘வாடிவாசல்’, ‘சூர்யா 43’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும், அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா கிரிக்கெட்டிலும் தடம் பதிக்கிறார். அதாவது, டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது. ஐ.எஸ்.பி.எல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.

2024-ஆம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.

இதைத்தொடர்ந்து, ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema