Tamilசெய்திகள்

சென்னையில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

சென்னையில் கொரோனா தடுப்பூசி மற்ற நகரங்களை விட அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு இருந்ததால் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு போடப்பட்டது. கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் கோவேக்சின் தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது. கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி மாநகராட்சியின் 45 மையங்களில் செலுத்தப்படுகிறது.

ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்கும், நேரடியாக முகாம்களுக்கு வருபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இன்று ஒவ்வொரு மையங்களிலும் கோவேக்சின் 200 பேருக்கும், கோவிஷீல்டு 200 பேருக்கும் போடப்படுகிறது. 18 ஆயிரம் டோஸ்கள் மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

நேற்று முகாம்களில் கோவிஷீல்டு மட்டும் 300 பேர் வீதம் 13 ஆயிரத்து 500 பேருக்கு செலுத்தப்பட்டது. தடுப்பூசிஒதுக்கீடு அதிகரிக்கும் பட்சத்தில் மையங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுவதால் மையங்களுக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.