Tamilசெய்திகள்

சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் – 15 மண்டலங்களில் ஆய்வு

சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சேறும், சகதியுமாக மாறும் இடங்கள் பற்றி 15 மண்டலங்களிலும் கண்டறியும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளார்கள். மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டின் மதிப்பீட்டின் படி சென்னையில் 320 இடங்களில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்ட பணிகள் என்று கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு உள்ளது. 4 முதல் 5 செ.மீ. மழை பெய்யும் போது தான் சவால்கள் ஏற்படும் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சேறாக மாறும் சாலை பகுதிகளில் மெட்ரோ வாட்டர், குடிநீர் வாரிய பணிகள் நடந்தால் மணல் அதிகமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மாதவரம், புழல், ஐஸ் அவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

அரசு நிறுவனங்கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரணமாகவே சேறு, சகதியாக ரோடுகள் மாறுகின்றன. எனவே நிறுவனங்களிடம் பணிகளின் தற்போதைய நிலை எப்போது முடிவடையும் என்பது பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.