Tamilசெய்திகள்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை – காவல்துறை அறிவிப்பு

சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதிப்பு குறைந்ததால் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது.

இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி, வரும் 31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ரிசார்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்புகளில் வர்த்தகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

மேலும், மெரினா, எலியட்ஸ், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.