Tamilசெய்திகள்

சென்னையில் நாளை முழு ஊரடங்கு – பஸ், மெட்ரோ ரெயில் ஓடாது

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணி முதல் மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி சென்னையில் மாநகர பஸ்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் 2,500 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும். இந்த பஸ்கள் அனைத்தும் நாளை முழுமையாக நிறுத்தப்படுகிறது.

இதே போல ஆட்டோக்கள் ஓடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களை ஏற்றி செல்லக்கூடிய எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.

விமானம், ரெயில் பயணம் மேற்கொள்ளுபவர்கள் சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது அதற்கான டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும்.

மெட்ரோ ரெயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

மின்சார ரெயில்களை பொறுத்தவரை 50 சதவீதம் நாளை இயக்கப்படுகின்றன. 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவிலான சேவை இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 113 ரெயில்களும், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டிக்கு 60 சேவைகளும், கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 சேவைகளும், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 120 ரெயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஆவடி- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் சர்வீசுகளும் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது. மொத்தம் 343 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாக 660 மின்சார ரெயில்கள் இயக்கப்படும். தற்போது முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய துறை ஊழியர்கள் செல்வதற்காக சேவை குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டும் முழு அளவில் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் ரெயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரெயில்களும், இரவு நேரங்களில் புறப்படக்கூடிய ரெயில்களும் நாளை வழக்கம் போல் இயங்குகிறது.

ரெயில் நிலையங்களில் வாடகை ஆட்டோ, கார்கள் பயணிகளின் பயணத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.