Tamilசெய்திகள்

சீமான் எதை சொன்னாலும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வேன் – அண்ணாமலை கிண்டல்

பா.ஜ.க.வின் முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் குறித்து சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்த சீமான், ‘அவருக்குத் தெரியாம படுக்கையறை, கழிப்பறையில் கருவியை வைத்து வீடியோவைப் பதிவு செய்ததுதான் சமூக குற்றம். படம் எடுத்தவரை கைது செய்து தெருவிற்கு இழுத்திருக்கணும். உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றை அவர் செய்திருப்பதாக காட்டிக்கொண்டிருக்கிறீங்க…

சட்டசபையில் வைத்து ஆபாச படம் பார்த்ததை பார்த்தோம். அதுபோன்று செய்யக்கூடாது. அவர் தனிப்பட்ட அறையில் செய்ததை எடுத்து வைத்துவிட்டு, அவர் அப்படி பண்ணிட்டாரு, அவர் அப்படி பண்ணிட்டாருன்னா?. அது என்ன… கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ? என்ற பயம் வருகிறது. யார் யாரோடு பேசுறது, யாரு கிட்ட பேசுறாங்க என்பதை ஒட்டுக்கேட்கிறது, ஒட்டுக்கேட்டதை பதிவு செய்வது. அதை வெளியிடுவது. இதனால் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். என்ன வந்திட போகிறது’ என்றார்.

இது குறித்து அண்ணாமலையிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘கே.டி. ராகவன் விவகாரத்தில் சீமான் எதற்காக ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று சூசகமான கருத்தைக் கூறினார்.

தொடர்ந்து அவர், ‘சீமான் எதை சொன்னாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வேன், சிரித்துக் கொள்வேன்’ என்று தெரிவித்தார்.