Tamilசெய்திகள்

சீனாவில் இருந்து வந்த விழுப்புரம் மாணவிக்கு கொரோனா அறிகுறி!

சீனாவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவில் சொந்த ஊர் திரும்பும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வைத்தே மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் காய்ச்சல், சளி தொல்லை போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனி வார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் மருத்துவம் படித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கடந்த 1-ந்தேதி சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சளி தொல்லை அதிகம் இருந்ததால் உடனடியாக அவரை முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள தனிவார்டில் வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்ற விபரம் தெரியவரும்.

சீனாவில் சமையல் வேலை செய்து வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 31-ந்தேதி சொந்த ஊர் திரும்பினார். நேற்று இரவு அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் சிகிச்சை பெற சென்றார். சீனாவில் இருந்து ஊர் திரும்பியவர் என தெரிந்ததும் டாக்டர்கள் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்புக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் கூறியதாவது:-

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கிண்டியில் உள்ள ரத்தப்பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது இவர் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் இவர் 30 நாட்களுக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பழங்குளத்தைச் சேர்ந்தவர் மாதவன். 35 வயதான இவர் சீனாவில் ஷாங்காய் நகரில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாதவன் கடந்த 28-ந்தேதி சென்னை-திருச்சி வழியாக விமானத்தில் வந்தார்.

இவருக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று கருதி அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் தனி வார்டில் மாதவன் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது காய்ச்சல் குறைந்து நலமுடன் இருப்பதாக மருத்துவ துறை துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

நான் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். எனக்கு சாதாரண காய்ச்சல்தான். அனைத்து சோதனையும் செய்யப்பட்டு எந்த பாதிப்பும் இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். என்னைப்பற்றி தவறான தகவல் வாட்ஸ் அப்பில் பரவியதால் இன்னும் 10 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். என்னை பற்றி வெளிவரும் தகவல் உண்மை அல்ல. நான் நலமுடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *