Tamilசெய்திகள்

சி.பி.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துறை இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன்படி 2015-16-ம் ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமானது. அதற்கு அடுத்த ஆண்டில் (2016-2017) 2-ம் வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2017-2018) 3-ம் வகுப்புக்கும் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக தமிழ் படிப்பு படிப்படியாக அமலானது.

கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது. இந்த வருடம் (2023-2024) 9-ம் வகுப்பு வரையிலும் 2024-25-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது. மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 2024-25-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.

இந்த மாணவர்கள் பொது தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியது கட்டாயம். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும். அதற்கேற்ப அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.

தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.