Tamilசெய்திகள்

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திவிட்டோம்! – டிரம்ப் அறிவிப்பு

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் தங்கியிருக்கவேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நினைப்பதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணிக்கான அமெரிக்கத் தூதரான பிரெட் மெக்கர்க் சில நாட்களுக்கு முன்பு இதுபற்றி கூறும்போது, “ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. யாரும் அவ்வளவு விவரமில்லாதவர்கள் இல்லை. எனவே நாங்கள் களத்தில் நீடித்து நிற்கவும், அதன் மூலம் இந்தப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை நிலவுவதை உறுதி செய்யவும் விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

ஆனால், வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிவருவதாக துருக்கி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கி அத்தகையத் தாக்குதலைத் தொடுக்குமானால், அது அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலைக்கு கொண்டு செல்லும்.

இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதேபோல் அமெரிக்கத் துருப்புகள் சிரியாவில் இருந்து வெகு விரைவில் வெளியேறும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்திலே அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *