Tamilசினிமா

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் திட்டமிட்டபடி இன்று ரிலீஸாகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (நாளை) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று அறிவித்தார்.இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், அவருடைய பதிவுக்கு பிறகு படத்தின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாகவும், அதனால் படம் திட்டமிட்டபடி நாளை (இன்று) வெளியாகும் என்றும் தகவல் வெளியானது.

ஆனால், இன்று காலை 5 மணிக்கான சிறப்பு காட்சி வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது படத்திற்கு எதிரான பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மாநாடு திரைப்படம் இன்று திட்டமிட்டபடி வெளியாகியுள்ளது. காலை 5 மணி காட்சி திறையிடப்படவில்லை என்றாலும், காலை 8 மணிக்கு காட்சிகள் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.