Tamilசெய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை – வணிகர் பேரவை சார்பில் கடையடைப்பு

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களை சாத்தான்குளம் போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

விசாரணைக் காவலில் தந்தை, மகன் என இரண்டு வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மருந்து வணிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக்கடைகள் மூடப்படும் என அறிவித்தது. அதன்படி இன்று காலையில் மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கடையடைப்பை தொடர்ந்து, உயிரிழந்த தந்தை, மகனுக்கு மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *