Tamilசெய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்

2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் இந்த சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.

இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் 12-ந்தேதி பந்தளம் ராஜ பிரதிநிதியின் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும்.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு நிருபர்களிடம் கூறியதாவது:-

மகரவிளக்கு பூஜையையொட்டி வருகிற 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 20-ந்தேதி காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டு நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெறும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் 12-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.